தொல்குடி மக்களான பறையர் சமூகத்தின் மீதான கண்ணோட்டத்தை விளக்கமாகவும், விரிவாகவும் ஆய்கிறது இந்நுால். இழிசினர், புலையர் போன்ற சொற்கள் வழங்கப்பட்டிருக்கும் சங்க கால இலக்கியத்தை முன் வைத்து, அவற்றிற்கான சொல்லாடலை முன்னிலைப்படுத்தி ஆய்கிறது இந்நுால்.
ஆதிக்கச் ஜாதியினரால், திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாற்று சுவடுகளை விரிவாக ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
பரையர், பறையர் ஆகிய இரு சொற்களும் ஒரே பொருளை தான் தருகின்றன என்று கருத்துரைக்கும் ஆசிரியர், பரை என்பது அம்மனை குறித்து வந்த சொல் (தற்பரை) என்று எடுத்துரைத்து, அதன் அடிப்படையில் அம்மனுக்கு தாலி கட்டும் மாற்று மணவாளனாக ஒரு பறை(ரை)யே இருந்திடும் நிகழ்வை இன்றும் கிராமங்களில் காணலாம் என்றும் சுட்டிக்காட்டுவர்.
இழிசினர் என்பதற்கு இழிவது, இறங்கி வருவது என்ற பொருளில், முருக வழிபாட்டில் முருகனே தங்கள் மீது இறங்கி வருவதாக கொண்டு, அப்படிப்பட்ட புலையரே குருக்களாக இருந்தவர்கள் என்கிறார் நுாலாசிரியர்.
ஆரியர்கள் வருகைக்கு முன்னரே தமிழகத்தில் பறையரும், புலையரும், பாணரும் சமுதாயத்தில் மதிக்கத்தக்கவர்களாக இருந்திருந்ததை, சில அடிப்படை சான்றுகளோடு சுட்டுவர்.
பறை என்பதை மைய பொருளாகக் கொண்டு இந்நுாலை படைத்திருப்பதால், நுால் நெடுக அது குறித்த செய்திகளும், தகவல்களும் மிகுதியாக காணக் கிடைக்கின்றன.
இந்நிலையில், இவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்ற கருத்தியலை அடிப்படை தரவுகளுடன் மெய்ப்பித்திருப்பதும், அதற்கான சான்றாதாரங்களை எடுத்துக்காட்டி தம் கருத்திற்கு வலிமை சேர்த்திருப்பதும் படிப்போரை வியப்பில் ஆழ்த்துவன. விரிவான மேலாய்வுக்கு இந்நுால் உதவிடும்.
– ராம.குருநாதன்