எல்லா காலக்கட்டத்திலும் மனித சமூகத்தில் தன்னம்பிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக கருதப்பட்டு நுால்கள் படைக்கப்பட்டு வருகின்றன. புறவெளியில் இருந்து நுால்கள் மற்றும் படிப்பை மூலமாகத் தன்னம்பிக்கைச் சாதனங்களைத் தேடும்படியான சூழல் நிலவுகிறது.
தன்னெழுச்சிக்காக பல்வேறு படைப்பாளர்கள் பொன்மொழித் தொகுப்புகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஏராளமாக எழுதி விட்டனர். இன்றளவிலும் எல்லாருக்குமே பிறருக்குச் சொல்வதற்கென்று பல்வகை அனுபவங்களோ, செய்திகளோ நாளும் ஊற்றெடுக்கின்றன. எழுத்தாளர்கள் அவற்றை பிறருக்காக நுால்களாக்கி வெளியிடுகின்றனர்.
பத்திரிகையில் தொடராக வந்த, 30 கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் நுாலாசிரியர் தியாரூ. தன் சொந்த கருத்துகளுக்கு இடையே, அனுபவங்களுக்கு இடையே பல்வேறு மேலை நாட்டு துணுக்குகளும் கோர்வையாக்கித் தரப்பட்டுள்ளன. நித்திரையில் பித்து உள்ளவர்கள் வெற்றி பெற முடியாது, தோல்விகள் வெற்றிகளுக்கு வழி வகுக்கும். வாழ்வின் மீது காதல் கொள்வோம். உங்கள் ஆற்றலே உங்கள் அடையாளம் போன்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன.
சிலர் நினைத்தால் முடித்து விடுவேன் என்பர். ஆனால், நினைக்கவே முனைப்பு ஏதும் இன்றி வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் மீதான நுாலாசிரியரின் சீற்றம் சில இடங்களில் வெளிப்படுகிறது. இளைஞர்கள் விரும்பும் நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு