உலகின் முதல் மனிதன் துவங்கி, இப்போது வரை தோன்றிய, 4,000 கோடி உலக மக்களில் தலைசிறந்த செல்வாக்கு மிக்க, 100 பேரை காய்தல் உவத்தல் இன்றி அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது.
அவ்வாறு மிகப்பெரும் விளைவுகளால், மானுடத்தின் மீது தாக்கம் ஏற்படுத்திய, 100 பேரை அடையாளம் கண்டாலும் அவர்களைத் தரவரிசைப்படுத்துவது அத்தனை எளிதல்ல. நல்லவராகவும் இருக்கலாம்; கெட்டவராகவும் இருக்கலாம்.
அத்தகு, 100 பேரைத் தரவரிசைப்படுத்தி, அவர்களின் முழுவிபரங்களோடு இந்நுாலை ஒரு அரிய தகவல் தொகுப்பாகப் படைத்திருக்கிறார் நுாலாசிரியர். 1978ம் ஆண்டில் முதல் பதிப்பாக வந்த நுாலின் குறைகளகற்றி, இரண்டாம் பதிப்பின் தமிழாக்கம் என, முன்மொழியப்படுகிறது.
உலகச் செல்வாக்கில் முதலாவதாக நிற்பவராக முகமது நபியை முன்நிறுத்தி, அடுத்து குறிப்பிடப்படுவது ஐசக் நியூட்டன் என்பது வியக்க வைக்கும். இதுவரை அறியாத பல்துறை வல்லுனர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் தகவல்கள் படிக்கப் படிக்க எழுச்சியூட்டுகின்றன.
உலகறிந்த சில அரிய கண்டுபிடிப்பாளர்களைத் தவிர்த்ததற்கு, அக்கால அறிவியல் தேடல்களின் சூழலில் அவர்கள் இல்லாவிடினும், பிறர் அவற்றைக் கண்டுபிடித்திருப்பர் என்று காரணம் கூறப்படுவது சிந்திக்க வைக்கிறது.
இன்று சாமானியர் முதல், செல்வந்தர் வரை, உலகம் முழுவதும் வளைத்துப் போட்டு ஆக்கிரமித்திருக்கும் வலைதள அறிவியலாளர் ஒருவரின் பெயரும் இணைக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தோன்றும்.
– மெய்ஞானி பிரபாகரபாபு