சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில் இருபது வயது இளைஞர்கள் சமூக வலைத்தள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்துகொண்டிருக்க, பதினெட்டாம் நுாற்றாண்டில் அதே இளம் வயதில் ஒரு ஒப்பற்ற மாவீரனாக விளங்கிய நெப்போலியனின் நிகரற்ற வரலாறே இந்நுால்!
இத்தாலியைப் பூர்விகமாகக் கொண்ட நெப்போலியன் குடும்பம் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட கார்சிகா தீவுக்கு குடிபெயர்ந்த காலகட்டத்தில், பிரெஞ்சுக்காரர்க்கும் ஒற்றுமையற்ற கார்சிகா தீவினர்க்கும் இடையே கடும் போராட்டம் நிலவிய சூழல்களும், தொடர்ந்த பிரெஞ்சுப் புரட்சிக் களங்களும் நெப்போலியனின் சக்கரவர்த்திப் படல மும் வீறு குன்றாமல் விவரிக்கப்பட்டுள்ளன. 24 வயது நெப்போலியனின் போர்த்தந்திரங்கள் பெற்ற வெற்றிகள் அவனைப் புகழின் உச்சிக்கு ஏற்றின.
பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியனுக்கும் ருஷ்ய சக்கரவர்த்தி அலெக்சாண்டருக்கும் இடையிலான பிணக்கும், வாட்டர்லூ போர்க்களமும், அவனது இறுதிக்காலமும் தொய்வின்றி சரள நடையில் கூறப்பட்டுள்ளன. படிக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு