இந்த விமர்சனத்தைப் படிப்பவர் யாரும், ‘அச்சோ... இப்படி ஆகிடிச்சே...’ என, ‘உச்’ கொட்ட வேண்டாம். படித்த பின், ‘தேவைப்படுவோருக்கு பேருதவியாக இதைச் செய்வோம்’ என உறுதி பூண்டு, அத்தகையவர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள் என, பகிரங்க அறிவிப்பு விடுகிறேன்.
இந்தப் புத்தகம், ‘ஆட்டிசம்’ பாதிப்புடன் இருக்கும் குழந்தையை வளர்ப்பது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறது. ஆசிரியர், அத்தகைய குழந்தையை அணு அணுவாய் ஆராய்ந்து வளர்த்து வருபவர். ‘கழிவிறக்கமே வேண்டாம் எனக்கு... உங்கள் குழந்தையை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். குறைபாடே இல்லை என்ற நிலைக்கு குழந்தையை உருமாற்ற, உங்களால் மட்டுமே முடியும்’ என, பெற்றோருக்கு அழகாய் எடுத்துரைக்கிறார்.
பெற்றோரும், வாழ்வில் எந்த வகையில் தயாராக வேண்டும் என்பதை விளக்குகிறார். எடுத்து எடுப்பிலேயே, ‘எதற்காக இந்த நுால்’ என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறார்.
புத்தகத்தின் முழு விளக்கமும் தன் குழந்தையுடன், தனக்கும், தன் கணவருக்கும் ஏற்படும் அனுபவங்கள் பற்றியே செல்கிறது.
தான் எதிர்நோக்கும் எந்த விஷயத்தையும், பொருளையும் அக்குழந்தை எப்படி கையாள்கிறது என்பதை ஆழ்ந்து கவனித்து, ஆராய்ந்து அதன் அடிப்படையில் அதற்கான செயல்களையும், திட்டங்களையும் உருவாக்கி, பரிசோதித்து, வெற்றி கண்டு வருவதை, அப்படியே வெளிப்படுத்தி உள்ளார்.
‘ஆட்டிசம்’ குழந்தைகளுக்கான பெற்றோருக்கு மட்டுமானதல்ல இந்தப் புத்தகம். ‘நம்மால் தான் இந்த உலகம் இயங்குகிறது’ என்ற நினைப்பில் உள்ளவர்கள், உலகின் யதார்த்தங்களை அறிய உதவும் நுால்.
– செண்பகவல்லி