தன்னந்தனி மனிதராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக, உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி நடத்தி, மகத்தான சாதனை புரிந்தவர் வீர மிகு நேதாஜி!
சுதந்திரம் பெற ஒரு லட்சம் வீரர்களைத் திரட்டி பிரிட்டிஷாருடன் போரிட்டு, மணிப்பூர் வழியாக வந்து இரண்டு நகரங்களைப் பிடித்து, பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சுபாஷ் போஸ்!
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில், இந்திய தேசிய ராணுவம் எந்த வகையிலும் ஜப்பானையோ, வேறு நாடுகளையோ நம்பியிருக்கக் கூடாது. நம் வலிமை ஒன்றை நம்பியே நாம் போராட வேண்டும்.
இந்திய தேசிய ராணுவத்தின் மீது ஜப்பான் ஆதிக்கம் செலுத்த முற்படுமானால், பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதைப் போன்று ஜப்பானையும் எதிர்த்துப் போரிட நாம் தயாராக இருக்க வேண்டும். அதில் எவ்விதத் தயக்கமும் காட்டக் கூடாது என்றார் போஸ்!
ஜப்பானின் உதவிகளைப் பெற்றுத்தான் சந்திரபோஸ் அனைத்தையும் செய்து கொண்ட போதும், ஜப்பான் தன்னிடம் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த போதும், தன்னுடைய நோக்கத்திற்கு மாறாக எதையும் செய்ய நேதாஜி ஒரு போதும் சம்மதிக்கவில்லை!
பொதுவாகவே பெண்கள் மென்மையானவர்கள் என்ற கருத்து நிலவிய அக்காலத்தில் அதை ஏற்க நேதாஜி மறுத்தார். தான் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவப் பெண்கள் பிரிவான ஜான்சிராணி படையில் சேர்ந்திட, பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்! அவரது அழைப்பை ஏற்று எண்ணற்ற பெண்கள் படையில் சேர்ந்தனர். நேதாஜியின் இந்த வீர வரலாற்றை இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும்! அது இந்திய இளைஞர்களிடம் நாட்டுப் பற்றையும், ஒற்றுமையையும் வளர்க்கும்!
– எஸ்.குரு