போர்களின் முடிவுகள், கொள்கை ரீதியிலானவற்றில் எல்லைத் தகராறு, மாறுபாடான புரிதல், தனிமைப்படுத்தும் போக்கு, ஆதிக்க வெறி, சிறுபான்மையினரை ஒடுக்குதல், ஒரு இனத்தை அழிப்பது, மத வெறி முதலான காரணங்கள், கொலை வெறியின் கோரத்தாண்டவமான இனப் படுகொலைகளுக்கு அடிப்படையாக உள்ளன.
கொத்து கொத்தாக மடிவது மனித உயிரல்லவா? இந்த இனப் படுகொலை, உலகின் எங்காவது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பேரினப் படுகொலை, தமிழர் இனப் படுகொலை தான்.
இதை நுாலின் துவக்கமாக அமைத்து, ஈழத்தில் நடந்த இனப் படுகொலையை விவரிக்கிறார் ஆசிரியர். பாலஸ்தீனப் படுகொலை; லட்சம் பேரைக் கொன்ற போவிலிஷ் படுகொலை; வணிகத்திற்காக நடந்தேறிய உக்ரைன் படுகொலை; யூத இனப்படுகொலை முதலானவற்றைச் சுருக்கமாக இந்நுால் கூறுகிறது.
இனப் படுகொலைகளுக்கான காரணங்களை ஆங்காங்கே ரத்தினச் சுருக்கமாக எடுத்துக் காட்டும் இந்நுால், நல்ல தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளமை பாராட்டுக்குரியது.