மனிதனின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் மனமே காரணம். மனம் உயர்ந்தால் சித்தன் ஆகிறான். மனம் பிறழ்ந்தால் பித்தன் ஆகிறான். பித்த நிலையில் சிதைந்த மனத்தை, பழுது நீக்கி ஒத்த நிலையில் வைக்கும், மருத்துவ அனுபவங்களை விவரித்துள்ள நுால்.
மருத்துவரின் குடும்பத்துக்கே மன நோய் தீர்த்ததும், முதல் இரவில் தம்பதியரின் தாம்பத்யம் தோற்றதும், தற்கொலைக்கு செல்லுமுன் காதலர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்து வெற்றி காண்பதும், மன நோயாளி பெண் மனைவி போல கட்டி அணைப்பதும் என மன நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
மயக்க மருத்துவரின் தற்கொலையை தடுத்தது, தலைமை ஆசிரியர் – ஆசிரியை காதலை தெளிவாக்க மகனை காதலிக்க வைப்பது, அடிக்கும் மனைவியிடம் இருந்து கணவனை மீட்பது, செத்த மகனை தேடும் தாயை உணர வைப்பது என, சம்பவங்கள் சிறுகதை போல விறுவிறு என நடக்கிறது.
காதல், காமம் இரண்டாலும் தான் பெரும்பாலும் மனம் சிதைகிறது. ‘லவ்’ என்பது திரில்லும் போதையும் தான். இதற்குக் காரணம் என்பார்பின் என்ற வேதிபொருள். இதை குறைக்கும் மருந்தைக் கொடுத்தால் காதல் போதை தெளிந்துவிடும்’ என்கிறார்.
மன நோயாளிக்கு செய்வினை பிடித்ததும், பேய் பிடித்தது என அடித்துத் துன்புறுத்துவதை கண்டிக்கிறார். செருப்பு, விளக்குமாறால், அடி வைத்தியம் செய்தால் பேய், பிசாசு ஓடிவிடும் சம்பவங்களில் உள்ள உண்மையை ஆராய்ந்து காட்டுகிறார்.
வேப்பிலை இருந்தால் காத்து கறுப்பு அண்டாது என்பர். அதுபோல், மனோ வியாதிக்கான மருத்துவ நுால் இருக்கும் இடத்திலும் பேய், பிசாசு அண்டாது.
– முனைவர் மா.கி.ரமணன்