கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன! என்று வண்ணம் சேர்க்கிறார்.
வாழும் இக்கருவறை – பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்புதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் ‘எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்’ படிப்பவர் மனதிற்கு இன்பமூட்டி நீங்கா இடம் பிடிக்கின்றன. நீண்ட நம் வாழ்க்கைப் பயணத்தைப் போன்று, இக்கருவறைத் தேசமும் நீண்டு, பல்வேறு இன்ப, துன்பங்களை நினைவூட்டி மகிழச் செய்கிறது.
-– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்