புதுவையில் பெரும்புயல் பற்றி, பாரதியின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு நுால். செய்திக் கட்டுரையாக, கவிதையாக, நிவாரணப் பணியாளராக என பன்முகமாக வெளிப்பட்டுள்ளது. புதுவையில் பாரதியார் வசித்தபோது, எத்தனையோ முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் பெரும் பாதிப்பு ஏற்படுத்திய புயல் ஒன்றும் வீசியது. அது தொடர்பான நிகழ்வுகளை செய்திக் கட்டுரைகளாக வடித்துள்ளார் பாரதி. கவிதைகளிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது.
புயல் வீசுவதற்கு முந்தைய தினம் புதிய வீட்டில் குடியேறியுள்ளார் பாரதி. பழைய வீடு புயலில் கடும் சேதம் அடைந்திருந்தது. அது பற்றி பாரதியார் குடும்பத்தினர் நினைவுகூர்ந்த பதிவுகளும் அடங்கியுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணியிலும் முன்னிலை வகித்துள்ளார். அந்த பணிக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. பாரதியின் செயல்பாட்டில் இருந்த மற்றொரு கோணத்தை சொல்லும் அபூர்வ நுால்.
– வசந்தன்