குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, பெற்றோர், ஆசிரியர் சமூகத்தின் பொறுப்பு, கடமை என்ன என்பதை உணர்த்தும் சிறுவர் நாவல். ஒரு மரப்பாச்சி பொம்மையை, தன் பாட்டியிடம் இருந்து பெறுகிறாள் சிறுமி. பொம்மை ஒரு நாள் பேசவும், ஆடவும் துவங்குகிறது. சிறுமியின் தோழிக்கு ஏற்படும் பிரச்னைக்கு பொம்மை தீர்வு காண்பது நாவலின் அடித்தளம்.
பாரம்பரிய விளையாட்டுகளை, குழந்தைகள் மொழியில் பேசுவது நாவலின் தனிச்சிறப்பு. பொம்மை பேசுமா என்பதை அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. ‘குட் டச், பேட் டச்’ என்ன என்பதை, வெறுமனே பேசாமல், அதை கதை வடிவில் குழந்தைகளுக்கு புரிய வைத்து, ‘என் உடல் என் உரிமை’ என்பதை உணர்த்தும்.
இன்னல்களை, பெற்றோரிடமே பேச தயங்கும் சிறுமிக்கு, பேசும் பொம்மை தைரியமூட்டும். தன்னிடம் யாராவது அத்துமீறினால், மன தடையை கடந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தைரியத்தை, சிறுவர் – சிறுமியரிடம் பதிய வைக்கிறார். ‘பாலசாகித்யா புரஸ்கார்’ விருது பெற்றுள்ளது இந்நுால்.
– டி.எஸ்.ராயன்