சாகித்ய அகாடமி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்குப் பெரும்பாங்காற்றிய ஆளுமைகளுக்கு நுாற்றாண்டு நினைவு விழாக்களை நடத்தியது. அந்த வகையில் பேராசிரியர் நா.வானமாமலை நுாற்றாண்டு விழாவையொட்டி நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.அரசு, நா.வா.,வின் ஒட்டுமொத்த பங்களிப்புகள் குறித்த நுட்பமான மதிப்பீட்டையும், தமிழாய்வுகளில் அவரது இடத்தையும், ‘பேராசிரியர் நா.வானமாமலையின் அரை நுாற்றாண்டு காலப்பயணம்’ என்ற கட்டுரையில் முன்வைக்கிறார்.
பெரியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் பெ.மாதையன், நா.வா.,வின் உலகப் படைப்புக் கதைகள், முருக வணக்கம், முருக ஸ்கந்த இணைப்பு உள்ளிட்ட தொன்மவியல் குறித்த பார்வையை, ‘புராணங்கள் ஆய்வுகளில் (தொன்மங்கள்) குறித்த நா.வானமாமலையின் ஆய்வுகள்’ எனும் கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார்.
வானமாமலை குறித்த மதிப்பீடாக அமையும் கட்டுரையும், ஆர்.நல்லகண்ணு, தொ.பரமசிவன் போன்றோரின் 17 கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழ் நாட்டுப்புறவியல் வளர்ச்சி, தமிழின் பல்திற ஆய்வு அணுகுமுறை வளர்ச்சி, தமிழில் மார்க்சிய ஆய்வு தொடர்பான தகவல் களஞ்சியமாகவும், ஆவணமாகவும் திகழ்கிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்