‘தினமலர்’ வாரமலர் இதழில், சீரான இடைவெளியில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். தினமலர் ஆசிரியரின் அணிந்துரையுடன் கூடியது. அணிந்துரையில், ‘நவீன உலகின் மனித வாழ்வு மற்றும் சமூக அவலங்களை படம் பிடித்து காட்டுகின்றன இவரது கவிதைகள். தனிமனித ஒழுங்கீனங்களை கண்டித்து, சாட்டையை சுழற்றியிருப்பதை படித்தால், நெஞ்சு பதைபதைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வாரமலர் இதழில் வெளியான காலத்தில், வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன இந்த கவிதைகள். தனித்துவம் மாறாத சிந்தனையைக் கொண்டுள்ளன. உள்ளக் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் கவிஞர்.
‘ஏன் வளர்கின்றன பிரச்னைகள்’ என்ற தலைப்பிலான கவிதையில், ‘புண்ணுக்கு புனுகு தடவுவது மாதிரி, கிடப்பில் போடப்படுகின்றன பிரச்னைகள்’ என்று உண்மையை உடைத்துள்ளார். இதுபோல், சமூக அவலங்களின் வேர்களை நோக்கியதேடல்களே, கவிதைகளாக மலர்ந்துள்ளன.
தொகுப்பில், காலம், பஞ்சம், போராட்டம், பிழைப்பு, நன்றி... என, தலைப்புகளை ஒரு ஒழுங்குமுறைக்குள் அமைத்து கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கால சுழற்சியை, நம்பிக்கையூட்டும் காவியமாக படைத்துள்ள கவிதை நுால்.
– மலர்