இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு, முதலில் குரல் கொடுத்த தமிழ் வீரர் பூலித்தேவன் என்று, சான்றுகளுடன் நிறுவியுள்ள நுால்.
புலியுடன் போராடி கொன்றதால், புலித்தேவன் என அழைக்கப்பட்டார். அவரது அணிகலன் புலி நகங்களே. இடை அணி அரண் புலித்தோலாகவே இருந்தது. நெல்லைச் சீமையில் நெற்கட்டான் சேவல் பாளையக்காரராக இருந்தார். ஆங்கில அரசுக்கு கப்பம் கட்ட முடியாது என்று குரல் கொடுத்தார். பாளையக்காரர்களை கூட்டணியாக்கியவர்.
கூட இருந்து குழி பறிப்பவர்கள் அன்றும் இருந்திருக்கிறார்கள். நெருங்கிய நண்பன் அனந்த நாராயணன் ஆங்கிலேயர் வழங்கிய பொருளுக்கு ஆசைப்பட்டு, பூலித்தேவனை பிடித்துக் கொடுத்துள்ளதாக பதிவாகியுள்ளது. நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால்.
– சீத்தலைச்சாத்தன்