சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும், அவரோடு தனக்கு ஏற்பட்ட அறிமுகம் மற்றும் அனுபவங்களையும், இந்த நுாலில் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார் பேராசிரியர் ராஜ்ஜா.
மரணத்தை ஒரு பரிசுத்தமாகப் பார்த்தவர் பிரபஞ்சன். அதனால் தான் என்னவோ, துக்க வீடுகளுக்கும் வெள்ளை வெளேர் வேட்டி சட்டை அணிந்து வருகிறார் என்பது துவங்கி, அபூர்வமாக அவர் கவிதைகளும் எழுதி உள்ளார். அந்த 36 கவிதைகளையும், பிரபஞ்சன் தன்னிடம் வழங்கி இருக்கிறார் என்பது வரை, பல்வேறு தகவல்களை சொல்லி உள்ளார்.
பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்திலிங்கம் என்பது அறிந்ததே. அதே நேரத்தில், புதுவை பொன்னித்துறைவன், மருத்துவக்குடி மகாராஜன், பிரபஞ்சக்கவி என, பற்பல புனைப்பெயர்களில் தன் படைப்புகளை எழுதி இருக்கிறார் என்பது, கூடுதல் தகவல். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் என உச்சத்தில் இருந்தபோது, நாடகாசிரியராக உருவெடுத்தது எப்படி என்பது குறித்தும், இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
படைப்புகளைப் போலவே, எழுத்தாளர்களின் வாழ்க்கையும் தனித்துவம் நிறைந்தவை. அவற்றையும் அறிய வேண்டுமென விரும்பும் வாசகர்களுக்கானது இந்த புத்தகம்.
– சையத் அலி