வியாச முனிவரின் மகாபாரத சம்பவங்களை மையப்படுத்தி, கதை நாயகர்களில் ஒருவனான துரியோதனன், அரக்கு மாளிகையில் பாண்டவர்களை எரிக்கும் ஏற்பாட்டிற்கு, முன்னும் பின்னுமாக நடந்த சம்பவங்களை விவரித்துச் சொல்லும் கற்பனைப் புதினம். புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
மரணத் தருவாயில் துரியோதனன், வாழ்நாளில் பின்னோக்கி, ஆற்றாமைகள், ஆதங்கங்கள் போன்றவற்றைச் சொல்லும் நிகழ்வுகள், மாறுபட்ட சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன. கதைக் களத்தை காட்சிப்படுத்தி, துரியோதனனிடம் உள்ள நற்குணங்கள், பெரிதாக கருதப்படவில்லை என்ற விமர்சனப் பார்வையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நட்பிலும் பெருந்தன்மையிலும் சிறந்து விளங்கிய துரியோதனன் இயல்புகளை முன்வைத்து, குருஷேத்திரப் போரில், பாண்டவர்கள் நிகழ்த்திய அதர்மங்களை யாரும் ஏன் பெரிதுபடுத்தவில்லை என்ற கேள்வி ஆய்வுக்குரியது.
வெற்றிக் கதைப் பாத்திரங்களின் குறைகளை மறைத்து சித்தரித்து, பிறரது நடுநிலைக் குணங்களை எடுத்துக்காட்டி, ஒருவரின் நன்மை தீமைகளை நிர்ணயிப்பவை சந்தர்ப்ப சூழ்நிலைகளே என்பது, அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வயது மூத்தவனான தருமன், அஸ்தினாபுரம் அரியணையில் அமரவிருப்பதைப் பொறுக்காமல், துரியோதனன் பொருமியது, பீமனுடன் நேருக்கு நேர் மோத விரும்பியது, சகுனியின் ஊக்கச் சொற்கள், சுபத்திரை மீது துரியோதனன் காதல், அர்ச்சுணனின் வில் வித்தையைக் கண்டு வியக்கும் துரோணரின் நெகிழ்ச்சி போன்ற பலவும் கண்முன் விரிகின்றன.
துரியோதனனே வாசகர் முன் நின்று கதை சொல்வதுபோல் படைக்கப்பட்டுள்ளது. மகாபாரதக் கதைகளை எளிதில் புரிந்து கொள்ள ஏற்றவாறு, எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு