கடந்து போன வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து நனவில் நினைவலைகளில் தோய்ந்த எழுத்தாளர் ஆர்.வி.எஸ். என்ற ராமமூர்த்தி வேங்கட சுப்பிரமணியன், மன்னார்குடி அனுபவங்களை நகைச்சுவையோடு பதிவு செய்துள்ள நுால்.
ஹரித்ரா நதி எனும் அகன்ற தெப்பக்குளமும் ஆங்காங்கே வருவதால் அதுவே தலைப்பானது. பக்கத்துக்கு பக்கம் இயல்பான நகைச்சுவை இழையோடும் உரையாடல்கள் வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. கடந்து வந்த ஒவ்வொரு நிகழ்வையும் கண்முன்னே நடப்பதுபோல் நுணுக்கமாகக் காட்சிப்படுத்தியிருப்பதில் நினைவாற்றலைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு வகுப்பிலும் நடந்த சுவையான சம்பவங்கள் விரிப்பில் கடந்து போன பசுமையான நாட்களின் தகவல்கள் சுவை குன்றாமல் பகிர்ந்திருக்கிறார். வற்றிய குட்டையில் கிரிக்கெட் ஆடியது; வால்வ் வானொலியில் ஒலிபரப்புகள் கேட்டது; மலையாளப் படம் பார்த்து மாட்டியது; ஆன்டென்னாவைத் திருப்பித் திருப்பி தொலைக்காட்சி பார்த்தது;
வீட்டுக்கொல்லையில் படமெடுத்த பாம்பைப் பார்த்து உளறியது; கைப்பேசி புழக்கத்தில் வராத காலத்தில் அறிமுகமாகிய கம்ப்யூட்டரைப் பார்த்துப் புரிபடாமல் வியந்தது. மிருதங்கப் பயிற்சி எடுத்தது; மாணவர் கூட்டமாக சைக்கிள் ஓட்டியது என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் விரவியிருக்கும் பழைய சம்பவங்களின் விவரிப்பு இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு