சாம்பவர் மக்கள் வாழ்வியலை, வரலாற்று பார்வையுடன் விவரிக்கும் நுால். வாழ்க்கை முறை, பொருளாதாரம், நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், வழிபாடு, சடங்குகள், இலக்கியம் குறித்து அலசுகிறது. பொறையர் என்ற சொல்லின் திரிபு பறையர்; இது, காலப்போக்கில் சாம்பவர் என மாறியது. வசதி படைத்தவர்கள் சாம்பவர் என்ற சொல்லை பயன்படுத்தும் பழக்கம் அதிகம் என வரலாற்று பின்புலத்துடன் அலசியுள்ளது.
ஆத்திசாமி, ஊசிகாத்தான், பலவேசக்காரன், வண்ணாரமாடன் போன்ற, 21 கிராம தெய்வங்களை பரம்பரையாக வழிபட்டு வந்ததை விவரித்துள்ளது. இந்த தெய்வங்கள், தாழ்ந்தவை, பேய்கள், ரத்த பலிவாங்குபவை என, உயர் சமூகத்தால் கருதப்பட்டுள்ளது. பிற ஜாதியினரை காதல் திருமணம் செய்ய ஊர் கட்டுப்பாடு இருந்துள்ளது.
விதவை எதிரே வந்தால் தீமை, கர்ப்பிணி வந்தால் நன்மை; ஆணுக்கு வலது கண், பெண்ணுக்கு இடது கண் துடித்தால் நல்லது; நாக்கில் கரும்புள்ளி இருப்பவரிடம் மோதக்கூடாது; ஒருவர் புறப்படும்போது தும்மினால் செயல் தடைபடும் போன்ற நம்பிக்கைகளை தோலுரிக்கிறது.
மண் குடத்திற்கு பதில் பயன்படுத்தப்பட்ட காவட்டை, நெல்குதிர், தடுக்கு, தழுவை தட்டு போன்றவை தற்போது காணாமல் போனதையும் சொல்கிறது. சாம்பவர் சமூக பண்பாட்டை தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்