செய்யுளின் இறுதி எழுத்தோ, இறுதிச் சொல்லோ, இறுதித் தொடரோ அடுத்த செய்யுளுக்கு முதலடியில் வைத்துப் பாடப் பெறுவது அந்தாதியின் இலக்கணம். ‘உதிக்கின்ற’ என்று துவங்கும் அபிராமி அந்தாதி 100-வது பாடலில் உதிக்கின்றனவே என்று மாலை போல மண்டலித்து அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற தலைப்பை தந்துள்ளார்.
பின் இணைப்பில் விநாயகர் அகவல், சிவ புராணம், சஷ்டி கவசம் முதலியவற்றை இணைத்திருப்பது பயன் தரும். முன்னுரை துவங்கி 57 -தலைப்புகள் நுாலை அழகு செய்கின்றன. திருவடிப்பேறு, திருவடி மகிமை, கருணையின் அதிசயம், உத்தம நட்பு வாய்க்க, மீண்டும் பிறவாதிருக்க, எல்லாம் நீயே, கிருபையின் மகிமை, வணங்குவோரை வணங்குவோர் அடையும் பயன்கள் போன்ற தலைப்புகளில் தரும் உரை விளக்கம் பக்திப் பரவசப்படுத்தும்.
அபிராமி பட்டரால் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய பாடல்களுக்கு, ஆசிரியர் தரும் உரை விளக்கம் மேலும் சிறப்பு செய்கிறது. அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். நாள்தோறும் பக்தியுடன் படித்துப் பயன் பெற வழி கூறும் நுால்.
– புலவர் இரா.நாராயணன்