கண் முன் எழுந்து வருவதே கவிதை என தனித்தன்மையுடன் கவிதைக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்த நுால். மொத்தம், 109 தலைப்புகளில் கவிதைகளை கொண்டு உள்ளது. ஆழ்ந்த அறிவும், அனுபவமும் கவிதைகளாக களி நடனம் புரிகின்றன. சங்க இலக்கியம் முதல் தற்கால புதுகவிதை வரை, கவிஞர் திறனுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து உதவியுள்ளது தெரிகிறது.
முக்குறுணிப் பிள்ளையார் துவங்கி, அனைத்துத் தெய்வங்களின் மகிமையையும் எளிய பாடல்களாக வடித்துள்ளார். கட்டுமரம், இரவு, சிட்டு, சிறை, நேருவா மறைந்தார், புத்தன் பிறந்தான், பொன்னி நாடு, தஞ்சை, மாணவன், எது வாழ்க்கை, வெள்ளைப் பறவை, அது போதும் போன்ற எளிமையான தலைப்புகளில் அமைந்துள்ளன கவிதைகள்.
நாட்டு நலனும் சமுதாய நலனும் கவிதைகளில் ஓங்கி உயர்ந்துள்ளன. கவிதை எழுத முயற்சிப்போருக்கு பயன்படும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்