தமிழகத்தில் 64 அருங்கலைகளின் தோற்றம், வளர்ச்சியை வரிசைபடத் தொகுத்துரைக்கும் நுால். தொல் கலைகளை நாகரிக மாற்றங்களுக்கு ஏற்பப் புதுப்பித்தும், கற்பனைக்கேற்ப புதிய கலைகள் உருவாக்கியும் தமிழர்கள் வளர்த்து வந்ததை வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கிக்காட்டியுள்ளது.
சிற்பக்கலையின் தோற்றம், சுதை, கற்கள், உலோகம், தந்தம் போன்றவற்றில் சிற்பங்கள் உருவான வரலாறு, காலம் மற்றும் குகை ஓவியங்கள், கோவில் ஓவியங்கள் சார்ந்த வரலாற்றுப்பதிவுகள் என சிறப்புற பதிவு செய்யப்பட்டுள்ளன.
அழகியல் ஆர்வலர்களால் உருவான ஒப்பனைக்கலை, உடைக்கலை, அணிகலன் கலை, நடனக்கலை, நாடகக்கலை மற்றும் கேட்டு இன்புறும் இசைக்கலை போன்ற நுண்கலைகளின் தோற்றம், வளர்ச்சி விளக்கப்பட்டுள்ளது. படைக்கலை, வான நுாற்கலை, நிலநுாற்கலை, நீதிக்கலை, அளவை நுாற்கலை பற்றிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.
பரவலாக அறியப்படாத உடற்குறிக்கலை, சிரிப்புக்கலை, பூதநுாற்கலை, தம்பலக்கலை விபரங்களையும் அறிய தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு