சமூகத்தில் நிகழும் நன்மை, தீமைகளை கவிதை வரியில் பேசும் நுால். ‘அம்மா’ என துவங்கி, ‘நன்றி’ என முடியும், 78 தலைப்புகளில் அமைந்துள்ள தொகுப்பு நுால். பாசம், ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், மனிதாபிமானம், பண்பாடு, மூடநம்பிக்கை, ஒழுக்க நெறியை மையப்படுத்தி ஒவ்வொரு கவிதையும், மனதில் ஆணி அடித்தது போல் உணர்த்துகிறது.
கல்வி குறித்து, ‘அழியா செல்வம், நிரந்தர செல்வம்’ என்று கூறியதுடன், பணம் பறிக்கும் பள்ளிகளையும் சாடுகிறது. ‘விளம்பர புதுமையாய், அட்டை படத்தில் அடுப்பங்கரையில் அடங்கிக் கிடக்கும் அடிமைகள் அல்ல’ என, பெண்களின் துணிச்சலை பேசுகிறது.
கவிதையோடு, அதன் கருத்தை ஓவியமாக படைத்திருப்பது, வாசிப்பின் சுவாரசியத்தை அதிகரிக்கச் செய்கிறது. கவிதை எழுத துடிப்போருக்கு பயன்படும் நுால்.
–
டி.எஸ்.ராயன்