சாதாரண குடும்பத்தில் பிறந்து தடைகளை கடந்து, பிரபல அரசியல் கட்சியில் மிளிரும் பெண் அரசியல்வாதியின் வாழ்வு அனுபவங்களை தொகுத்து தரும் சுயசரிதை நுால். ‘ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை’ என்ற முத்தாய்ப்பை கொண்டுள்ளது. அனுபவங்களின் சரம், 14 தலைப்புகளில் தொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கால அனுபவம், கல்லுாரியில் படித்த போது நடந்த சம்பவங்கள் எல்லாம் சுவாரசியம் குன்றாமல் தரப்பட்டுள்ளன.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, அயராத முயற்சியால் அடைந்த முன்னேற்றம் எளிய நடையில் கதை போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி வகுப்பறையில் கற்பித்து, மாறுதலாகி சென்ற ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஏற்படுத்திய தாக்கம் வியப்பூட்டுகிறது.
அரசியல் கட்சியில் முக்கிய தலைவர்களை சந்தித்த தருணங்கள் வியப்பு மேலிட தரப்பட்டுள்ளன. முயன்றால், தடைகளை உடைத்து முன்னேறலாம் என உணர்த்தும் சுயசரிதை நுால்.
– மதி