ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் அடிப்படையாகக் கொள்ளாமல், எந்த செயலும் இந்த தேசத்தில் நடைபெறாது. திருமாலின் அவதாரங்களான ராமரும், கிருஷ்ணரும் வணக்கத்திற்குரியவர்களாக உள்ளனர். கிருஷ்ணருடன் தொடர்புடைய யமுனையும், ராமருடன் தொடர்புடைய கங்கை, நர்மதை நதிகளும் புனிதமாக போற்றப்படுகின்றன.
ராமாயணம், மகாபாரதத்தை எத்தனையோ பேர் எழுதினாலும், அவற்றை புதிதாகப் படிப்பது போல் தான் வாசகர்கள் ஆர்வம் கொள்கின்றனர். இது, வெளிநாட்டவரையும் கவர்ந்துள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமிக்கு, வெளிநாட்டவரும் வந்து ஆனந்தமாய் நடனமாடி மகிழ்கின்றனர்.
அவ்வகையில் இதிகாசக் கதைகள் என்ற இந்த நுால், படிக்க எளிமையாய், மகிழ்ச்சி தருவதாக உள்ளது. ராமபிரான் இளம் வயதில் ஊனமுற்ற பெண் மீது கல்லைத் துாக்கி எறிந்தானாம்.
மந்தரை என்ற அந்தப் பெண், அதற்காகவே பழி வாங்கினாளாம். என்ன தான் ராமர் தெய்வப்பிறவி என்றாலும், இப்படி செய்தது தவறு தானே என தோன்றும்.
ஆனால், ராமரின் நோக்கத்தை இந்த நுாலில் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர். மந்தரையை இழிவுபடுத்துவது அவரது நோக்கமல்ல. அப்படியானால், அவரது நோக்கம் தான் என்ன... இந்த நுால் படித்தால் விடை தெரியும். இத்தனை நாளும் ராமர் மீது கொண்டிருந்த அபிப்ராயம் மாறும்.
மகாபாரதத்தில் சகுனி என்றால் யாருக்குமே பிடிக்காது. அவன் எவ்வளவு நல்லவன் என காட்டப்பட்டுள்ளது. சகுனியின் தாயக்கட்டைகள் அவன் சொல்படி எப்படி நடந்தன என்ற புதிருக்கான விடை அவிழ்க்கப்பட்டிருக்கிறது. சகுனியே கவுரவர்களின் எதிரி என்பதும், காந்தாரி திருதராஷ்டிரனுக்கு இரண்டாம் தாரம் போன்ற புதுப்புது தகவல்களும் உள்ளன.
ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒன்றாக்கி தந்துள்ளார் ஆசிரியர். இன்றைய இளைய தலைமுறைக்கான நுால்.
– தி.செல்லப்பா