பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம், மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 360.)
`தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பணிபுரியத் தொடங்குவதற்கு முன்பே சமதர்ம உணர்வையும், பொது உடைமைக் கருத்துக்களையும் முதன் முதலில் பரப்பியவை திராவிட இதழ்களே' என்னும் கருத்துக்கு வலிமை சேர்க்கும் இந்நூலில், பிராமணரல்லாதார் இயக்கத்தின் போர் முரசாக 1.6.1917 முதல் ஒலித்த `திராவிடன்' நாளிதழ் பற்றிய (ஆசிரியருக்குக் கிடைத்த சில இதழ்களின் அடிப்படையில்) ஆய்வை இதழ் வடிவம், உள்ளடக்கம், சந்தா, ஆசிரியர் பெயர், முகப்புப் பக்கங்கள் போன்ற பல கோணங்களில் அணுகியுள்ளார்.
முன்னோடி தமிழ் இதழ்களான முத்துவீர நாவலரின் `மகா விகட தூதன்' (1886), இரட்டைமலை சீனிவாசனின் `பறையன்' (1893), பண்டிதர் அயோத்திதாசரின் `ஒரு பைசாத் தமிழன்' (1907) இன்னும் பிற இதழ்களும் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
`திராவிடன்' இதழ் பற்றிய ஆய்வு இதற்கு முன்போ அல்லது இந்நாள் வரையிலோ எவராலும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, `திராவிடன்' பற்றிய சுருக்கமான ஆய்வை முதன் முதலில் மேற்கொள்ள எனக்கு வாய்ப்பேற்பட்டது என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்' என்று முன்னுரையில் பெ.சு.மணி குறிப்பிட்டுள்ளது 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட இயக்க ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய குறிப்பாகும். நூலாசிரியரின் இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டலாம்