அந்நிய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடக்கும் தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக, கலெக்டருக்கு ஈடான உயர் பதவியை துச்சமென துறந்து, இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர், நேதாஜி. அம்மாவீரனின் மரணம் இன்று வரை விடை காண முடியாத, விடை காண விரும்பாத பெரும் புதிராக இருந்து வரும் நிலையில், இந்த நூல், ‘நேதாஜியின் மரணம் திட்டமிடப்பட்ட வதந்தி. அவர் விமான விபத்தில் இறக்கவில்லை; மறைத்து வைக்கப்பட்டார் என்பதே உண்மை’ என, அன்றைய கால நிகழ்வுகள், பத்திரிகை மற்றும் வானொலி செய்திகள், அரசியல் தலைவர்களின் பேச்சு என பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறது.
கடந்த, 1964 மே 27ம் தேதி நேரு இறந்த போது, அவரது உடலை, பீரங்கி வண்டிக்கு சுமந்து சென்ற நால்வரில் நேதாஜியும் ஒருவர். இக்காட்சியை, இந்திய அரசின் செய்தி பிரிவு வெளியிட்ட நிழற்படக் காட்சி, திரையரங்குகளில் காட்டப்பட்டதாகவும், பின், காங்கிரஸ் அரசு, நேதாஜி இருந்த அக்காட்சியை மட்டும் நீக்கி, வெளியிட்டதாகவும் தன் பால்ய வயது சம்பவத்தையும் சான்றாக பதிவு செய்துள்ளார், நூலாசிரியர். (பக். 66 – 67)
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதாலும், ஜப்பான் அரசின் ஒத்துழைப்புடன் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்திலிருந்த இந்திய எல்லைப் பகுதிகளை கைப்பற்றியதாலும், நேதாஜியை போர்க் குற்றவாளியாக அறிவித்திருந்தது பிரிட்டிஷ் அரசு. இதனால், நேதாஜியை தப்புவிப்பதற்காக, திட்டமிட்டே ஜப்பான் அரசு, பொய்யான விமான விபத்து கதையை சோடித்தது என்பதை, பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். மேலும், காங்கிரஸ் அரசால், நேதாஜியின் மரணம் பற்றிய உண்மை செய்திகள், மறைக்கப்பட்டு, புதைக்கப்பட்ட சரித்திரமாக போய் விட்ட அவல நிலையையும் இந்நூலில், சுட்டிக்காட்டிஉள்ளார்.
ப.லட்சுமி