சித்தர் மரபினர் வாழ்வையும், அவர்கள் உலகுக்கு அருளிய அறிவுரைகளையும் விளக்கும் நுால். சித்தர்களை, அறிவன், நிறை மாந்தர் என்று தொல்காப்பியமும்; அவிர்சடை முனிவர் என புறநானுாறும் புகழ்கின்றன. தியானம், யோகத்தின் வாயிலாக புத்தியைக் கட்டுப்படுத்தியவர்கள் என விளக்குகிறது. சித்தர்கள் பதினெட்டு பேர் என அட்டமாசித்து என்ற நுாலும், நிஜானந்த போதமும், அபிதான சிந்தாமணியும் வரையறுக்கின்றன.
பவுத்த மதத்திலும் சித்தர்கள் வாழ்ந்ததாக பதிவிட்டுள்ளார். ஞானோதயம் பெற்ற திருவெண்காடார், பட்டினத்து அடிகளாக துறவறம் மேற்கொண்ட நிகழ்வுகளும் பதிவிடப்பட்டுள்ளன. சித்தர் வாக்குகள் மட்டுமின்றி, மருத்துவ முறைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆன்ம உயர்வில் பற்று கொண்டவருக்கு மகிழ்வு தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்