‘தினமலர்’ வாரமலரில் தொடராக வெளிவந்து, பின் புத்தக வடிவில் வெளியாகி, பலரது பாராட்டுதல்களை பெற்ற புத்தகம். தற்போது, 11வது பதிப்பாக வெளிவந்துள்ளது.
பங்கு வர்த்தகம் என்றாலே, பலருக்கு வேப்பங்காயாக கசக்கும். அதில், புழங்கும் நடைமுறைகள், சொற்கள் ஆகியவை, எட்ட இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும். மொத்தத்தில், பலாப்பழ மேல்தோல் போல், பார்வைக்கு கடினமாக காணப்படும் பங்கு வர்த்தகத்தில், பக்குவமாக நுழைந்தால், பணம் என்னும் தேன்சுவை கொண்ட பழத்தை ருசிக்கலாம் என்கிறார் ஆசிரியர்.
புத்தகம் நெடுக, எளிய நடையில் பங்கு வர்த்தகத்தின் நெளிவு, சுளிவுகளை விவரித்து, ஆங்காங்கே எச்சரிக்கையும் விடுத்து, பணம் பண்ணும் வித்தையை, சாதாரணமானவர்களுக்கும் புரியுமாறு விவரித்திருக்கிறார்.
பங்குச் சந்தையில் புழங்கும், காளை, கரடி என்ற சொற்களுக்கு, எம்.ஜி.ஆர்., நம்பியாரை உவமையாக்கியிருப்பது, அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட முதலீடுகள் குறித்து, இளைஞர்களுக்கு வழிகாட்டும் இந்த புத்தகத்தில், பங்குகளின் தற்போதைய விலை விவரங்களை மேம்படுத்தியிருக்கலாம்.
விஜய்தேவ்