சூரிய ஒளி, நெருப்பு இரண்டுமே வெப்பத்தைத் தருகின்றன. ஆனால் ஒரு விதையானது சூரிய ஒளியில் எவ்வளவு ஆண்டுகள் காய்ந்தாலும், அதை விதைத்தால் செடியாகவோ, மரமாகவோ வளருகிறது. சூரியன் எவ்வளவு வெப்பமுடையதாக இருந்தாலும், விதையில் உள்ள உயிராற்றலை அழிப்பதில்லை. ஆனால், நெருப்பில் ஒரு நிமிடம் போட்டாலும் உயிராற்றல் அழிந்து விடுகிறது. இதுபோலவே சமைத்த உணவுகளும்.
சூரியன் எனும் சமையல்காரர் சமைத்த உணவுகள் நமக்குப் போதுமானது; மறுசமையல் தேவையில்லை. நெருப்பினால் விதை அதன் வளர்ச்சியை இழப்பது போல, நெருப்பில் சமைத்த உணவினால் நம் மலர்ச்சியை இழக்கிறோம். நம் நாட்டில் எளிதாக கிடைக்கும் தேங்காயும், வாழைப்பழமுமே முழுமையான இயற்கை உணவு தான் என, இந்த நூலாசிரியர் கூறுகிறார். இயற்கை உணவு என்றால் என்ன, சமைத்த உணவிற்கும், அசைவ உணவிற்கும் உள்ள வேறுபாடு, உடலின் கழிவுகள் வெளியேறும் விதம், ஆழமான மூச்சு என, மனித வாழ்வியலின் முறைகளை இந்த நூல் அழகாக வெளிப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு உபதேசிக்காமல் தானே இயற்கை உணவு உண்டு, அதன் அருமையை மற்றவர்களுக்கு எழுத்தின் மூலம் உணர்த்துகிறார்.
எம்.எம்.ஜெ.,