வீதிகள் தோறும், ஆங்கிலக் கல்விக் கூடங்கள் நிரம்பியுள்ள நிலையில், கற்றல், கற்பித்தல் என்பது, ஆசிரியர், மாணவர்கள் என இருதரப்பிற்குமே, பெரும் சுமையாகவே உள்ளது. கல்வி என்பது, பொருளீட்டும் முதலீடாகவே கருதப்படும் அளவுக்கு சமூக மாந்தரின் சிந்தனை சுருங்கி விட்ட நிலையில், கற்றலும், கற்பித்தலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை, நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் எழுதியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி, வகுப்பறை ஒழுக்கங்களை முதல் பத்து கட்டுரைகளில், செம்மையுடன் எடுத்தியம்பியுள்ளார் நூலாசிரியர்.
அதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில், நிலைதடுமாறும் குடும்ப அங்கத்தினரால், பிள்ளைகள் எப்படி பாதை தவறி, சீரழிகின்றனர் என்பதை, உளவியல் பூர்வமாக விளக்கியுள்ளது, சிந்திக்கத்தக்கது.
இன்று பெரும்பாலான குற்றங்கள் படித்தவர்களாலேயே நிகழ்வதை சுட்டிக்காட்டி, பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தங்கள் கடமைகளில், எண்ணங்களில் செம்மையுடன் திகழ்ந்தாலே, சமுதாயத்தில் நிகழும் குற்றங்கள் பாதியாக குறைந்து, மனித மாண்புகள் காக்கப்படும் என்ற தன் கருத்தை, எளிமையான நடையில் பதிவு செய்துள்ளார், எனினும், சில கட்டுரைகளில், பெரும் பத்திகள், சுயதம்பட்டமாக மிளிர்வதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம்.
– ப.லட்சுமி