சிவசக்தி சிவன்மலை பித்தன் நடராசன், உலகப் பொதுமறை திருக்குறளின், 1,330 குறட்பாக்களுக்கும் மிகுந்த சிரத்தையோடு ஓவியம் தீட்டி, அதற்கான விளக்கங்களையும் சுருக்கமாகத் தந்துள்ளார்.
மத நல்லிணக்க, தேசிய ஒருமைப்பாட்டுப் பேழை என்பதால், எங்கெங்கெல்லாம் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மத சின்னங்களைப் புகுத்த முடியுமோ அங்கெல்லாம் வலிய வரைந்து, தற்காலத்திற்கேற்ப மத நல்லிணக்க சிந்தனைகளை நிலை நாட்டியுள்ளார்.
சமயங்களில் மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டின் தலைவர்கள், ஞானிகள், மாமனிதர்கள், பல்வேறு தெய்வங்களையும் ஓவியமாக்கி இணைந்துள்ளார். ‘அகர முதல’ என துவங்கும் முதல் குறளிலேயே சமய நல்லிணக்கம் தெரிகிறது.
‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ குறளுக்கு புத்தரையும், ‘உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்’ குறளுக்கு வள்ளலாரையும், ‘பொய்யாமை அன்ன புகழ் இல்லை’ குறளுக்கு காந்தியடிகளையும் ஆக இப்படியே ஓவியப் பேழை நீள்கிறது. ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியது. சிறுவர்களுக்கு போதிப்பதற்கு படத்துடன் கூடிய பயனுள்ள ஓவியப் பேழை.
– பின்னலுாரான்