பல ஆண்டுகளாக ஆய்வு செய்து திரட்டப்பட்ட கொங்கு நாடு பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நுால்.
கொங்கு நாட்டின் இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, ஆவணங்கள், வாய்மொழிக் கதைகள், பிறரது ஆராய்ச்சிக் குறிப்புகள் என, கொங்கு சீமையின் தகவல் களஞ்சியமாக இந்நுால் உள்ளது.
அது மட்டுமன்றி, சங்க காலம் முதல், ஆங்கிலேயர் காலம் முதலான கொங்கு நாட்டை இந்நுால் கண்முன் படைக்கிறது.
பண்டைய கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தவர்கள், தமிழ் மறையான திருக்குறளின் அடிப்படையில் ஆண்டதை இந்நுால் வழி நிறுவும் ஆசிரியரின் தேடலும், சான்றும் வியப்பிற்குரிய உண்மை.
மேலும், ஆதித்த சோழன், வீரராசேந்திரன், இரண்டாம் ராசாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் கரிகாலன் என்ற பட்டப்பெயர் பூண்டு, அப்பெயராலேயே கல்வெட்டுகளும் பொறித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
கன்னியாகுமரி கல்வெட்டிலும், அன்பில் செப்பேடு மற்றும் திருவாலங்காட்டு செப்பேடிலும் பழங்காலச் சோழரைக் கூறுமிடத்தில், புராண காலச் சோழர் பெயர் தவிர்த்து, சங்க காலச் சோழர் பெயர் மிகச் சிலவற்றில் கரிகாலன், பெருநற்கிள்ளி என்ற இரு பெயர்களுமே கூறப்படுகின்றன.
இதன் வழி கரிகாலனையும், பெருநற்கிள்ளியையும் இணைத்துக் கூறும் வழக்கம் சோழ நாட்டில் மரபாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.
அதே போல், சங்க இலக்கியத்தில் காணப்பெறும், ‘வாடாப் பூவின் கொங்கர், கட்டிப் புழுக்கில் கொங்கர்’ அகநானுாறு மற்றும் பதிற்றுப்பத்து வரிகள் வழி, தம் தாய் மண்ணான கொங்கு நாட்டின் பழம் பெருமையை எடுத்துரைக்கிறார் இந்நுாலாசிரியர்.
பாரம் போற்றிய கொங்கு நாடு, அறச்சலுார் கல்வெட்டுகள், கொங்குநாட்டு புலவர்கள் என, 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் கொங்கு நாட்டின் வளத்தை எடுத்துரைக்கிறது.
இந்நுால், கொங்கு வட்டாரம் குறித்த புரிதலுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில்
மாற்றில்லை.
– ஆதி