நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை, அறிவுரைகளாக சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். எளிய தலைப்புகளில், அரிய கருத்துக்களை படைத்துள்ளது. முதல் கட்டுரை, ‘நாம் தனியாக இல்லை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. சமூகத்துடன் இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை மென்மையாக சொல்கிறது; தனித்து நின்றால் ஏற்படும் பிரச்னைகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டி அறிவுறுத்துகிறது.
அரிதே பெரிது, பேசி மகிழ்வோம், வெளியே தெரியாது என, மிக எளிய முறையில் அமைந்த தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டுரைகளில், பாரதியார் படைப்புகளில் இருந்து அறமிக்க மேற்கோள்கள் உதாரணமாக காட்டப்பட்டுள்ளன.
நம்பிக்கை, நல்லிணக்கம், உழைப்பு, கூடி வாழ்வது, தொண்டு மனப்பான்மை, மென்மையான அணுகுமுறை போன்ற மேன்மை குணங்களை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது. அவற்றை கைக்கொள்வதால் ஏற்படும் மேன்மைகளை எடுத்துரைக்கிறது. அன்றாடம் சிக்கலின்றி வாழும் கருத்துக்களை கொண்டுள்ளது. வாழ்வில் முன்னேற விரும்புவோருக்கு படிக்கட்டாக அமைந்த நுால்.
– ராம்