கார்காலத்து இரவு கும்மிருட்டு... திடீரென்று பளீரிடுகிறது ஒரு மின்னல். அந்த மின்னொளியில் மலை, அருவி, பரந்த புல் தரை, மரங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என காட்சிகள் வருகின்றன. இந்த புத்தகமும் கவிதை மின்னல்களை தந்து கண்கூச வைக்கிறது. அதன் வெளிச்சத்தில் பக்தி, சமுதாயம், உறவு, நட்பு, தனிப்பாடல் என அழகியல் அற்புதங்களால் பிரமிக்க வைக்கிறது.
மீனாட்சி திருக்கல்யாணத்தில் கைகூப்பி வரம் கேட்பவர்களை பார்த்திருக்கிறோம்.
மீனாட்சி எங்கள் பெண்; மதுரையின் அரசி. காடு மலை சூழ்ந்த கைலாயத்தில் அவள் கஷ்டப்படுவாள்.
‘தோடுடையாய் நின் தோள்களில் தாங்கி நிதம் வாடிக்கால் நோகா வண்ணம் நீ காத்திடுவாய்...’
மீனாட்சியின் தந்தை நிலையில் இருந்து சொக்கனிடம் கவிதை சொல்லும்போது கண்ணீர் காடு ஆகிறது கண்கள்.
நிர்வாண ஷதகத்தில், ‘ந புண்யம் ந பாவம் ந சௌக்யம் ந துக்கம்’ என ஆதிசங்கரர் செய்த முழக்கத்தை அதே வீரியத்துடன் மொழிபெயர்த்துள்ளார் கவிஞர். மனமும் இல்லை; அறிவும் இல்லை; மயங்க வைக்கும்அகந்தை இல்லை... தினமும் என்னை உணரச் செய்யும் தீமை வினை செய் புலனைந்ததில்லை. சங்கரரின் ஞான வெறியை மடைமாற்றும் வல்லமை இந்தக் கவிஞருக்கு மட்டுமே கிடைத்த வரம்.
வீட்டில் விளக்கேற்றும் மனைவியர் வாய்த்திருப்பர். ஆனால், விளக்கில் தன்னையே நெய்யாக இடும் மனைவி கவிஞருக்கு மட்டுமே கிடைத்த பேறு.
‘விளக்கினில் திரியிடுவாள் – அதில் விட்டுடு நெய்யெனத் தனையிடுவாள்’
கவிஞரின் மனைவி, பாடல் பெற்ற தியாகச் சுடரொளியாக மின்னுகிறாள்.
‘என்றும் தனக்கென ஒன்றுமிலாள் – என்பும் எனக்கெனச் சொல்லியே ஏந்தி நிற்பாள்’ என்று புகழும்போது, அந்த மாதரசி இருக்கும் திசை நோக்கி கைகூப்புகிறோம். மன வானத்து மின்னல்கள் கவிதைகளின் தொகுப்பு இல்லை; உன்னத உணர்வுகளின் குவியல். வார்த்தைகள் வழியாக வாழ்க்கை வேரையும் காட்ட முடியும் என ஒரு தனிமனித நம்பிக்கைக்கு கிடைத்த தன்னிகரில்லாத வெற்றி.
– வரலொட்டி ரெங்கசாமி