சங்க இலக்கியம் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான தமிழின் இலக்கிய இலக்கணம் குறித்த பல கட்டுரைகளின் தொகுப்பே, இந்நுால்.
சங்க இலக்கியங்களில் ஆயர்கள், புள்ளினம், வாழ்வியல் எனப் பொதுவான கருத்துகளும், புறநானுாறு, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து குறித்த தனித்த சிந்தனைகளும் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன.
இவ்வாறே, திருக்குறள், சீவகசிந்தாமணி, நளவெண்பா, சித்தர்கள், சிற்றிலக்கியங்கள், நாவல், சிறுகதை, மொழியியல், நாட்டார் வழக்கு, மொழிப்பயன்பாடு என இன்றுவரையிலான பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் சுவைபயக்கின்றன.
மலர்கள் என்றவுடன் நினைவுக்கு வருவது குறிஞ்சிப்பாட்டு. ஆனால், சீவகசிந்தாமணியில் மலர்களைப் பற்றிய சிந்தனை கட்டுரையாக்கப்பட்டுள்ளது.
வேவு என்பது நகரத்தார் செய்யும் சீர் என்றும், அது குறித்தும் அறிய முடிகிறது. குறவஞ்சியில் இன்றைய பெண்ணியக் கருத்துகளையும், திருக்குறளில் நீர்மேலாண்மைச் சிந்தனைகளையும், பிரதாப முதலியார் நாவலில் தனிமனித வாதத்தையும் ஆராயும் கட்டுரைகள் இக்காலத்திற்குத் தேவையான கருத்துகளை முன்வைக்கின்றன.
கால்நடை மருத்துவத்துக்கு வித்திட்டது யார்? சித்தர்கள் என்பவர் யார்? எனப் பல்வேறு வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையிலும் இந்நுால் அமைந்துள்ளது. இசை, சோதிடம், கலை சார்ந்த சிந்தனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அன்று தொடங்கி இன்று வரையிலான பல்வேறு கருத்துக்களைக் கூறுவது மட்டுமின்றி, மரபு சார்ந்தும் புதுமையான நோக்கிலும் ஆராயக் கூடிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது, இந்நுால். மொத்தத்தில், தமிழின் மரபையும் புதுமையையும் அறிய விரும்புவோர்க்கு இந்நுால் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் ந. ஆனந்தி