மலைத் தொடரிலிருந்து தனித்துவிடப்பட்ட காடு சூழ்ந்த பொற்றைக்காட்டின் வாழ்வியலை வரலாற்று போக்கில் தரும் நுால். சாதாரண மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் சாதாரண மக்கள் வாழ்க்கையை தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஓலையை ஒடுக்கிக் கட்டி, நெருப்பு வைத்து இருட்டை விரட்டிய வாழ்க்கை முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சந்தைக்கு போகும் வண்டியில் காளை மாட்டின் கழுத்து மணி ஓசை, அதை வைத்து வண்டியின் வேகத்தைக் கணிக்கும் முறை பற்றி எல்லாம் தரப்பட்டுள்ளது.
ஐந்து பிரிவுகளில், 68 அத்தியாயத்தில் ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்களை காப்பியம் போல் விவரிக்கிறது. ஆங்கிலச் சொல்லிலிருந்து உருவான ‘பெட்டி’ கடை பற்றியும், அதில் விற்கும் பொருள்கள், தொங்க விடப்பட்டிருக்கும் பத்திரிகைகள் பற்றியும் சுவைபட விவரித்து காட்சிப்படுத்துகிறது.
அந்திக் கடை, சந்தை, காளைச் சந்தை முதலான சொற்கள் காதுக்குச் சுக அனுபவம் தருகின்றன. மண்ணின் வரலாறை எடுத்துக் காட்டும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்