தமிழ் செம்மொழிக்குரிய தகுதியை கட்டுரைகள் மூலமாகத் தமிழகத்திலும், அயலகத்திலும் கொண்டுசெல்லும் தமிழறிஞர், 23 கட்டுரைகள் வழி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். உலக அளவில் தமிழ் மொழி எவ்வகைகளில் ஆராயப்பட்டுள்ளது என்பதனை மேல்நாட்டு அறிஞர்களின் வழித் தெரியப்படுத்தியிருக்கிறார். உலக அளவில் தமிழ் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்பதையும், பிற மொழிகளில் தமிழின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதையும் சான்றாதாரங்களோடு மெய்ப்பித்துள்ளார்.
திருக்குறளின் பெருமையை உலக அளவில் எடுத்துச்சென்ற அயலக அறிஞர்கள் குறித்த கட்டுரை விரிவானது. தமிழர் அடையாளமும், வடவர் பண்பாட்டு எதிர்ப்பும் என்ற கட்டுரை பல புதிய கருத்துகளைச் சொல்கிறது.
கால்டுவெல்லும், உலகளாவிய தமிழாய்வும் என்ற கட்டுரையில் உலகில் இன்றுவரை நிகழும் தமிழாய்வினை மேற்கொள்ளும் அகிரா பூஜிவாரா, சுசுமு ஓநோ ஆகிய ஜப்பானிய அறிஞர்கள் கருத்துகளை எடுத்துரைக்கிறார். கொரிய மொழிக்கும், தமிழுக்கும், உரிய உறவு நிலையையும் சுட்டியுள்ளார். மேனாட்டுக் கிறித்துவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைச் சிறப்பித்து ஆய்வுக் கருத்துகளையும் எடுத்துச்சொல்கிறார். மொழியார்வத்தில் எங்கிருக்கிறோம் என்ற சிந்தனையை ஊட்டுவதாகவும் உள்ள நுால்.
– ராம.குருநாதன்