உலகையே ஆட்டி படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக, அறிவியல், உளவியல் ரீதியாக தொகுக்கப்பட்ட நுால். வைரஸ் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் அதிகம் இடம் பிடித்தன. ஆனால், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் அதிகம் பரவின. இதனால், மக்கள் குழப்பம், பயம் அடைந்தனர். இவை, ஐந்து அத்தியாயங்கள் வழியாக விவரிக்கின்றன.
வைரசின் தோற்றம், பரவல், உடல், மனநல பாதிப்புகள், தடுப்பு மருந்து உருவாக்கம், சர்வதேசம் சந்தித்த பிரச்னைகள், மக்களின் வாழ்வியல் சோதனைகள் போன்ற தொடர் நிகழ்வுகளை கண்முன் கொண்டு நிறுத்துகிறது.
வைரசால் ஏற்படும் நன்மை, தீமைகள், அரசியல் பார்வைகள், இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம், அரசின் நடவடிக்கைகள், மக்களின் பங்களிப்பு, மருத்துவ துறையின் தியாகம், உளநல பிரச்னைகளை கையாளும் நடைமுறைகள் குறித்து விளக்குகிறது.
உலகளவில் இதுவரை தாக்கிய வைரஸ்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த பட்டியல் தொகுக்கப்பட்டு உள்ளது. கொரோனா போன்ற வைரசில் இருந்து, மனித குலம் தப்பிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். வைரஸ் பாதித்தால், உளவியல் பாதிப்பு இல்லாமல், அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை தெரிந்து கொள்ள உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்