(ஐந்தாம் பாகம், விரிவாக்கப்பட்ட முதல் பதிப்பு)தொகுத்து வழங்கியவர்கள்: கல்லிடைக்குறிச்சி வைணீக வித்வான்கள் ஏ.சுந்தரமய்யர், எஸ்.வேங்கடேசன். மியூசிக் புக்ஸ் பப்ளிஷர்ஸ், பு.எண்.4 (ப.எண்.51), அலர்மேலுமங்காபுரம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 133)
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் சிஷ்ய பரம்பரையினரது வெளியீடு என்பதனாலேயே இந்நூல் பெருமை வாய்ந்தது எனக் கூறலாம்! இந்நூலில், மூன்றாவது அக்னி சக்ரத்தில் உள்ள ஆறு மேளகர்த்தா ராகங்களுக்கு கீர்த்தனங்களும், அத்துடன் பல புதிய கீர்த்தனங்களும் சேர்த்து, மொத்தம் தீட்சதரின் 32 கீர்த்தனங்கள் இடம் பெறுகின்றன.முதலில் சமஸ்கிருதத்திலும், அதைத் தொடர்ந்து, ஸ்வர - சாகித்யத்துடனும், பின்னர் கருத்துரை, தமிழில் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தமெனத் தொகுத்து வழங்கியுள்ளனர். 36 ராகங்களுக்கான லட்சணங்கள் மற்றும் சிறிய ராக சஞ்சாரம் பற்றிய குறிப்புகள் யாவும் சங்கீதம் கற்பிக்கும் வித்துவான்களுக்கும், பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும். மேலும், "கேய ஹெஜ் - ஜஜ்ஜீ' எனும் ராகம் தற்போது, "காயகப்ரியா' எனவும் "வாடீ வஸந்த பைரவி' என்ற ராகம் இப்போது "வகுளாபரணம்' என்றும் (பக்.47-48) "தோய வேக வாஹினி' என்ற மேளகர்த்தா ராகம் தான் தற்போது "சக்ரவாஹம்' என்று அழைக்கப்படுகிறது போன்ற பல அரிய விஷயங்களை இந்நூலில் உள்ள ராகலட்சணம் பகுதி வாயிலாக அறிய முடிகிறது.கர்நாடக இசைப் பிரியர்களுக்கும், கற்போர்களுக்கும் இனிய வரப்பிரசாதம் இந்நூல்!