விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இன்றைய கர்நாடக இசையுலகில் இளம் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது! வாய்ப்பாட்டிலும், வாத்திய இசைக் கருவிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இத்தகைய இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டி நிலவி வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. பெரும் முயற்சி எடுத்தாலும் இவர்கள் அத்தனை பேருக்கும் டிசம்பர் இசை விழாவின்போது சபாக்களால் மேடை கொடுக்க முடிவதில்லை!
இளம் இசைக் கலைஞர்களுக்கு பாடுவதற்கும் வாசிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு, பேசுவதற்குக் கிடைப்பதில்லை. அவ்வப்போது பத்திரிகைகளில் பேட்டி வெளிவந்து கொண்டிருந்தாலும், அந்தச் சந்தர்ப்பமும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை என்பதே உண்மை!
இசை உலகுக்கு நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழும் சிலரைப் பேட்டி கண்டு, அந்தக் கட்டுரைகளை ஒரே தொகுப்பாக வெளியிட விரும்பினோம். வாய்ப்பாட்டு தவிர வயலின், கீ_போர்டு, மிருதங்கம், கஞ்சிரா கலைஞர்களையும் தொகுப்பில் இடம் பெறச் செய்யவும் தீர்மானித்தோம். ஹரிகதையையும் விட்டு வைக்கவில்லை!
பத்திரிகையாளர் சாருகேசி 28 இளம் கலைஞர்களை சந்தித்து இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொருவரும் தாங்கள் இசைத் துறையில் நுழைந்தது பற்றி பேசியிருக்கிறார்கள். குருமார்களைப் பற்றி பெருமையாக சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். விமரிசனங்களைப் பற்றிய தங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாமே ‘யூத்ஃபுல்’ பேட்டிகள்!
இந்த இளம் பட்டாளத்துக்கு ரோல் மாடலாக இன்றைய சீனியர் கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான சுதா ரகுநாதன் இந்த நூலுக்கு இனிமையானதொரு அணிந்துரை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இந்த வித்தியாசமான தொகுப்பு, வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெறும் என்பதில் ஐயமில்லை.