உருது மொழியில் வெளிவந்த புகழ்பெற்ற 10 கதைகள், இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ‘வேலி போடப்படாத கனவு’ என்பது முதல் கதை. நிலம் வாங்கி, அதில் தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்டிக்கொள்ள ஆசைப்படுபவனின் ஆசைக்கு நேரும் இடையூறுகளைச் சொல்கிறது இந்தக் கதை. ‘ஒரே ஒரு ஊரிலே’ என்று ஒரு கதை. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக அன்புடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற முக்கியமான செய்தியைச் சொல்லும் இந்தக் கதைதான், இந்தத் தொகுதியிலேயே சிறந்த கதை. தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்ற தன் கணவன் இறந்துவிடும் போது, அதற்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அந்தச் செய்தியை சாதாரணமாக ஏற்கும் தன்மானம் மிக்க ஒரு பெண்ணைச் சித்தரிப்பது, ‘முடிவு பெறாத வேதனை.’
மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், மதவெறியைத் தான் தூண்டும் என்ற கசப்பான உண்மையைச் சொல்வது ‘மறந்து போன நாடோடிக் கதை!’ தன் தாய் வாழ்ந்த ஊருக்குச் சென்று தன் வேர்களைத் தேட வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு மகளின் கதை, ‘முள், இந்த வையகத்தில் இறைவன்’ கதையின் வரிகள், கவித்துவம் மிகுந்தவை. ஒரு குறுங்காவியம் போல் சுவை ஊட்டுகிறது. இலகுவான, தமிழில் மொழிபெயர்ர்த்து இருக்கும் முக்தார் பத்ரி, விசேஷமான பாராட்டுக்கு உரியவர்.
எஸ்.குரு