ஆழ்வார்கள் பன்னிருவரில் பெரியாழ்வாரும் ஒருவர்; ஆண்டாளைப் பேணி வளர்த்த பெருமைக்கு உரியவர்; நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் இவர் இயற்றிய திருப்பல்லாண்டும், திருமொழியும் தோரண வாயில்களாக திகழ்பவை. வைணவ பிரபந்தங்களில் மிகுந்த ஈடுபாடுடைய பேராசிரியர் ம.பெ.சீனிவாசன், தமிழில் எழுதி சாகித்ய அகாடமியால் வெளியிடப்பட்ட நூலை, ஆங்கிலத்தில், பத்மா சீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார். மிக எளிமையான நடையில், மூல நூலின் கருத்தினை உள்வாங்கி மொழிபெயர்த்துள்ளமை பாராட்டுக்குரியது.
பன்னிரு பாசுரங்களைக் கொண்ட திருப்பல்லாண்டின் அமைப்பினை விவரித்து, அதில் மூன்று வகையான பக்தர்கள் நிலைகளை உள்ளடக்கிக் கூறியுள்ளார். (பக். 31). பெரியாழ்வாரின் பக்தியும், கண்ணனின் தாய் யசோதாவாகத் தன்னைக் கருதிக்கொண்டு அவர் பாடிய பாசுரங்களும் உள்ளத்தை உருக்குவன. கண்ணனை, அவனது செயல்களை பல்வேறு கோணங்களில் அழகிய வர்ணனையில் எவ்வாறு பெரியாழ்வார் பாடியுள்ளார் என்பதை விரிவாக ஆராய்கிறார் நூலாசிரியர். வைணவ சமயத்தில் ஈடுபாடு கொண்டோருக்கு மட்டுமின்றி, ஏனையோருக்கும் இந்த நூல், உவப்பை அளிக்கும்.
ராம.குருநாதன்