இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப் பெரும் ஞானிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர் ஸ்ரீ நிசர்கத்த மஹராஜ். ௧௮௯௭ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மாருதி என்பதே இயற்பெயர். திருமணம் செய்து கொண்டு (ஒரு மகன், மூன்று மகள்கள்) சிறு வியாபாரம் செய்வதன் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவருக்கு, ஸ்ரீசித்தராமேஷ்வர் மஹராஜ் என்ற ஆன்மிக குரு ஒருவரின் மூலம் மந்திர உபதேசம் கிடைக்கப் பெற்று உள்விழிப்புணர்வு பெற்றார். பின் குடும்பம், வியாபாரம் ஆகியவற்றைத் துறந்து தேசாந்திரியாய் அலைந்தார். போகுமிடமெல்லாம் சொற்பொழிவுகள் செய்வதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் எந்த ஒரு சித்தாந்தத்தையோ, மதத்தையோ முன் வைக்கவில்லை. ஒருவருடைய மெய்யான இயல்பையும், கால வரம்பு அற்ற இருத்தலையும் புரிய வைப்பது தான் அவருடைய குறிக்கோள். ‘சுயம் அறிதல்’ பற்றி அவர் தந்திருக்கும் விளக்கங்கள் சற்றுக் கடினமானவையே.
‘சுயம் அறிதலில்’ நாட்டமுள்ள ஆன்மிக அன்பர்கள் படிக்க விரும்பலாம்.
மயிலை சிவா