சீக்கிய மதத்தின், 10வது குருவாக விளங்கியவர் குரு கோவிந்த் சிங். இவர் பிறக்கும் போது, முகலாய அரசு தன் அரசியல் வலிமையின் உச்சத்தில் இருந்தது. அவுரங்கசீப் தன் தந்தையை கைதாக்கி, சகோதரர்களை கொன்று தானே, ‘ஆலம்கீர்’ – உலகை வென்றவன் என்ற பட்டத்தை ஒட்டிக் கொண்டு, முகலாய இந்தியாவின் பேரரசனாக, எட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன.
அவுரங்கசீப் பின்பற்றிய மத ஈர்ப்புத் தன்மையின்மை கொள்கையானது, ஷாஜஹானின் ஆட்சிக் காலத்திலேயே துவங்கி விட்டது. ஷாஜஹான் காலத்திலேயே முகலாய ஆட்சியாளர்களிடம், இந்துக்களுக்கு அரசியல் ரீதியான எதிர்ப்பு துவங்கி விட்டது. அது, அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நாற்புறமும் வெடித்துச் சிதறியது.
சீக்கிய சக்திக்கும், முகலாய ஆட்சிக்குமிடையே பகை நிலவி வந்த அக்காலத்தில், பல்லாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி, அவர்களிடம் உறங்கிக் கிடந்த ஆற்றலை தட்டியெழுப்பி அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், வலிமையையும் ஊட்டி, தூய பக்தி உணர்வுடன் கூடிய சமூக விதிகளுக்கு வித்திட்டவர் குரு கோவிந்த் சிங்.
‘குரு கோவிந்த் சிங் அமைதியான ஒரு சமய உட்பிரிவை ராணுவ சக்தியாக மாற்றிவிட்டார்...’ என்று பலர் கூறியுள்ளனர்.
இந்த நூல், குரு கோவிந்த் சிங்கின் வாழ்க்கை, தியாகம், வீரம் ஆகியவற்றை மிக விரிவாக தக்க சான்றுகளுடன் துல்லியமாக விவரிக்கிறது. 15க்கும் மேற்பட்ட நூல்களை காவிய நடையில் இயற்றியுள்ளார். ஒட்டு மொத்தத்தில் குரு கோவிந்த் சிங் ஒரு சிறந்த இலக்கியவாதி, ஆன்மிகவாதி, அத்துடன் சமூக சீர்திருத்த போராளி!
அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
– மயிலை சிவா