பள்ளி, கல்லுாரிப் பாடங்களை எத்தனைச் சிறப்பாகப் படித்தாலும், அன்றாட உலக நடப்புகளைப் புரிந்து சாதுர்யமாகத் தன்னை வழி நடத்திச் செல்பவரே வெற்றி அடைவதைக் காணலாம்.
பெரும்பாலும் ஊடகங்கள் வாயிலாகவும், இணையதளங்கள் மூலமாகவும் ஏராளமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சமூக மேம்பாட்டை பதிவு செய்யும் நுால்களும் வெளிவருகின்றன. அவற்றைப் படித்து, முக்கியமான சாரங்களை சமீபத்திய மாற்றங்களோடு பொருத்தி, விழிப்புடன் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
கடந்த ஏழாண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில், ஆசிரியர் கலைநன்மணி மகிழ்நன் எழுதி வெளிவந்த சமூக நோக்குக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.
சமீப காலமாக மாணவர் சமூகத்திடையே மிகப்பெரும் குழப்பங்களை ஏற்படுத்திய மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ எனும் கட்டாயத் தேர்வின் தொடக்கம் முதல், இன்றைய நாள் வரையிலான நிலைப்பாடு ஆகியவை விளக்கப்பட்டு உள்ளன.
கல்வி, விவசாயம் போன்ற பல தளங்களில் சில ஆண்டுகளில் ஏற்பட்ட மாறுதல்களைப் புரிந்து, மேற்கொண்டு புதிய தகவல்களை இணைத்து அறிந்து கொள்ள இந்நுால் உதவக் கூடும்.
– மெய்ஞானி பிரபாகரபாபு