தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கி, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்று போற்றப்பட்ட ஆண்டாளின் வாழ்க்கையுடன் நாச்சியார் திருமொழியின் மூலமும், விளக்கமும் அமைந்த நுால்.
திருமாலின் திருமகளே ஆண்டாளாகத் தோன்றி வில்லிபுத்துார் விஷ்ணு சித்தரின் வளர்ப்பு மகளானதாக புராணம் புகல்கிறது.
கண்ணன் மேல் கட்டற்ற தெய்வீகக் காதல் கொண்டு, ‘மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்’ என்று தெய்வமகளாக வாழ்ந்த ஆண்டாளின் தமிழ்ப் பாக்கள் பக்திப் பிரவாகமானவை.
செறிந்த இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு, இளம் வயதிலேயே கோதையின் செய்யுள் இயற்றும் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்துகிறது நாச்சியார் திருமொழி.
நனவிலும் கனவிலும் கண்ணனையே தன் நாயகனாக வரித்த கோதை, அரங்கனுடன் தன் திருமணம் நடந்தேறி விட்டது என்று கூறுவது பரவசத்தின் உச்சம்.
திருவரங்கக் கோவிலின் விமானத்தைக் கண்டதுமே, ஆண்டாள் புகை மண்டலம் சூழ மறைந்து அரங்கனை அடைந்ததாக நுாலில் விவரிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.
‘பெரிதினும் பெரிதடைய வேட்கை கொள்க’ என்ற கொள்கையைக் கற்பித்த ஆண்டாள் நாச்சியார் நல்கிய திருமொழி பதினான்கின் மூலமும் விளக்கமும் தரப்பட்டுள்ளன.
படிக்கப் படிக்கத் தெவிட்டாத தமிழ்ச் செய்யுள்கள் இதயத்தில் அமர்ந்து இனிக்கின்றன.
மார்கழி நோன்பு நோற்க யமுனையில் நீராடுவதற்குத் துயிலெழுப்பும் திருப்பாவைப் பாசுரங்களும் உரையும் நுாலுக்கு கூடுதல் சுவை சேர்க்கின்றன. நோன்பின்போது ஏற்கப்பட – தவிர்க்கப்பட வேண்டியவை. நோன்பின் பலன்கள் என நுாலில் அனைத்தும் எளிய உரையாகத் தரப்பட்டுள்ளன. படிக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு.