திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144.)
பிராகிருத மொழியில் உருவான `காதா சப்த சதி' நூலில் தொகுக்கப்பட்ட 700 பாடல்களில் 500 பாடல்களை பன்மொழிப்புலவர் ஜகந்நாத ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். அதில் 50 பாடல்களைத் தேர்ந்தெடுத்து உரை தந்துள்ளார் நூலாசிரியர். சங்க இலக்கியக் காட்சிகளையும், முத்தொள்ளாயிரக் கவிதைக் காட்சிகளையும் படித்துச் சுவைக்கும் வகையில் அக இலக்கியமாக அமைந்துள்ள இந்நூலில் எடுத்தாண்டுள்ள `காதா சப்த சதி' பாடல்கள் அழகுணர்ச்சியின் வெளிப்பாடாய் அமைந்துள்ளன.
`அமுதும் நஞ்சும் அவளே' (பக்.67), `இன்று மட்டும் அழவிடு (பக்.99), `காதல் அமுதத்தின் சுவை தேவாமிர்தத்துக்கு உண்டா?' (பக்.114) போன்றவற்றை திருக்குறளுடன் ஒப்பிட்டும், `விளையாட்டுச் சிறுமியா இப்படி' (பக்.115) என்ற சாலிவாஹனன் - பாடலுக்கு நற்றிணை, குறுந்தொகைப் பாடல்களை ஒப்பிட்டும் உரை எழுதியிருப்பது நூலாசிரியரின் புலமையை வெளிப்படுத்துகிறது. `கிளிகளின் பச்சை நிறம் பித்த நீர் போலவும், அதன் அலகுகள் ரத்தம் போலவும், பொந்திருந்து கிளிகள் பறப்பது மரம் வாந்தி எடுப்பது போலவும், காற்றுக்கு மரங்கள் அசைவது காய்ச்சலில் நடுங்குவது போலவும்' (பக்.107) எடுத்தாண்டுள்ள உவமைகளும் இந்நூலுக்குச் சிறப்பு. படித்து இன்புறத்தக்க நயமான நூல்.