கம்பன் கழகம், 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம் - 626117. (பக்கம்:192).
கம்பனின் காவியத்தில் மூழ்கி முத்தெடுத்த பல அறிஞர்களை அழைத்து அவர்கள் தரும் செவிநுகர் கனிகளைத் தாம் அனுபவித்தது போல, தமிழர்கள் அனைவரும் நுகர வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வரிய தொண்டினை, ராஜபாளையம் கம்பன் கழகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆய்வுப் பேழை நமக்குக் கிடைத்துள்ளது.
அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின், தமிழ்த்தொண்டிற்கு இந்நூலும் ஒரு சான்று. 25 தலைப்புகளில் கம்பனின் காவியத்தின் பல பகுதிகளை நன்கு ஆய்வு செய்துள்ளார். சீதையின் திருமணம் ஓர் இனிய களவியல் நாடகம் என்று விளக்குவதும் (பக்: 10) சீதையை மனச்சிறையில் வைத்து ராவணன் துன்புறும் பகுதியை நகைச்சுவை ததும்பும் ஒரு நாடகக் காட்சியாகக் கூறுவதும் சிறப்பானவை.
கம்பரைக் "கம்பநாட்டு ஆழ்வார்' என்று போற்றுவதை விளக்குவதும் (பக்: 146) கம்பரின் உவமைத் திறனை விளக்குவதும் (பக்: 147) அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் சொல்லாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள்.
பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட இக்கட்டுரைகள், இன்று வெளிச்சத்திற்கு வரக்காரணமான பேராசிரியர் ச.கணபதிராமனுக்கு, கம்பனின் அன்பர்கள் மிகவும் நன்றிக் கடன் பட்டவர்கள்.
பயனுள்ள அருமையான நூல்; அனைவரும் படித்து இன்புறலாம்.